tamilnadu

img

முதல் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி 5 சதவீதமாக சரிந்ததற்கு இதுவே காரணம்

நடப்பு 2019-20 நிதியாண்டின் முதல் காலாண்டில், இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 5 சதவீதமாக சரிந்துள்ளது என புள்ளியியல் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

நடப்பு 2019-20 நிதியாண்டில், ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான முதல் காலாண்டின் பொருளாதார வளர்ச்சி குறித்த அறிக்கையை நேற்று தேசிய புள்ளியியல் துறை வெளியிட்டது. அதில், நடப்பு நிதியாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி பெரும் சரிவை சந்தித்துள்ளது. கடந்த காலாண்டில் 5.8 சதவீதமாக இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி தற்போது 5 சதவீதமாக குறைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 6 வருடங்களில் முதல் முறையாக, இந்த அளவுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்த பொருளாதார மந்த நிலைக்கு சுரங்கத்துறை, உற்பத்தி துறை மற்றும் கட்டுமானத்துறை உள்ளிட்ட துறைகளில் ஏற்பட்ட சரிவே முக்கிய காரணமாக பார்க்கப்படுவதாக தொழில்துறை உற்பத்தி குறியீடுகளின் (ஐஐபி) தரவுகள் தெரிவிக்கின்றன.

சுரங்கம் மற்று குவாரி துறையின் ஜிடிபி வளர்ச்சி, கடந்த மார்ச் 2019 காலாண்டில் 4.2 சதவீதமாக இருந்தது, இதுவே ஜூன் 2019 காலாண்டில் 2.7 சதவிகிதமாக சரிந்துள்ளது. உற்பத்தித் துறையின்  ஜிடிபி வளர்ச்சி, கடந்த ஜூன் 2018 முதல் காலாண்டில் 12.1 சதவீதமாக இருந்தது, இதுவே மார்ச் காலாண்டில் 3 சதவீதமாக சரிந்துள்ளது. 

இதை அடுத்து, விவசாயம், காடு சார்ந்த வேலைகள், மீன் பிடித் தொழில் போன்ற துறைகளின்  ஜிடிபி வளர்ச்சி, கடந்த ஜூன் 2018 காலாண்டில் 5.1 சதவீதமாக இருந்தது, இதுவே ஜூன் 2019 காலாண்டில் 2.0 சதவீதமாக சரிந்துள்ளது. கட்டுமானத் துறையின் ஜிடிபி வளர்ச்சி, கடந்த ஜூன் 2018 காலாண்டில் 9.6 சதவீதமாக இருந்தது, இதுவே ஜூன் 2019 காலாண்டில் 5.7 சதவீதமாக சரிந்துள்ளது. நிதி, ரியல் எஸ்டேட் மற்றும் ப்ரொஃபெஷனல் சேவைகள் துறையின் ஜிடிபி வளர்ச்சி, கடந்த ஜூன் 2018 காலாண்டில் 6.5 சதவீதமாக இருந்தது, இதுவே ஜூன் 2019 காலாண்டில் 5.9 சதவீதமாக சரிந்துள்ளது.

விவசாயம், உற்பத்தி, சுங்கத்துறை மற்றும் கட்டுமானம் உள்ளிட்ட துறைகளில் ஏற்பட்டுள்ள சரிவே இதற்கு முக்கியமான காரணமாக கருதப்படுகிறது. இந்தியாவில் நிலவி வரும் பொருளாதார மந்தம் காரணமாக, டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு படு வீழ்ச்சி கண்டு காணப்படுகிறது. இதனால் அதிகளவிலான அன்னிய முதலீடுகளும் வெளியேறி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.